வெள்ளி, 30 டிசம்பர், 2016

கவிராசன் பாரதிக்கு ஒரு கவியஞ்சலி

கவிராசன் பாரதிக்கு ஒரு கவியஞ்சலி

        புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் நடத்திய கவி

யரங்கில் என் கவிதை இதோ.

                ரௌத்திரம் பழகு!!!!!
நகரத்தார் அரங்கினில்
அகரத்தை நம் அன்னை மொழி அதனைச்

சிகரத்தில் ஏற்றி வைத்த செந்தமிழன் பாரதிக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

கவிராசன் கழகமதில்
கவியரங்கம்  கேட்க
செவியோடு வந்திருக்கும்
செந்தமிழ்ப் பாவலர்காள்
அனைவருக்கும் என் வணக்கம்!!


துருப்பிடித்த உவமைகளால் மங்கிப்போன
   தூர்ந்துவிட்ட கற்பனையால் துவண்டு போன
இருளடைந்த இலக்கியத்தைச் சாணை தீட்டி
   இருந்தமிழைச் சீர்செய்தான் இனிமை கூட்டி
நெருப்பினிலே சொல்லேடுத்தான் தமிழும் ஆள!
   நேர்மை எனும் வில்லேடுத்தான் பகைமை மாள
அரும்பல்ல அவன்கவிதை வலிமை கூட்டி
   ஆதிக்கத்தின் அடிவேரில் பாயும் ஈட்டி !

செவ்வாய், 11 அக்டோபர், 2016

தயவுசெய்து கல்லெறியுங்கள்..!


தயவுசெய்து கல்லெறியுங்கள்..!

இனி வீணைகள்
விரல்கள் பார்த்தே
இசையை எழுப்பும்.....!
ஞானசம்பந்தர்களுக்கு ஞானப் பாலும்,
மற்றவர்க்கு கள்ளிப்பாலும்
கல்விப்பாலாய் வழங்கப்படும்.
வெள்ளைத் தாமரை
காவியாகும்.....

திங்கள், 19 செப்டம்பர், 2016

வழக்குரை காதை(பகுதி .5 ).தீர்ப்பு -உயிர் தந்து நீதி காத்தவன்

வழக்குரை காதை.( பகுதி .5) உயிர் தந்து நீதி காத்தவன் 

தீர்ப்பு ..யானோ அரசன்..?

                  மாணிக்கப் பரல்கள் தன் வாயருகில் தெறித்தவுடன் உண்மையை உணர்ந்தான் பாண்டிய நெடுஞ்செழியன். தவறிழைத்த தமக்கு, இந்நாட்டை ஆளும் தகுதி இல்லையென்பதை மனதளவில் உணர்ந்தான்.

                 யாம்..யாம் ..என அரசர்களுக்கே உரிய மரியாதைப் பன்மையுடன் பேசியவன், "யானோ அரசன்? யானே கள்வன்".. என யான்..என் என தன்னிலையினும் தாழ்ந்தான்

வியாழன், 15 செப்டம்பர், 2016

வழக்குரை காதை.(பகுதி .4) உடையும் சிலம்பும் வெளிவரும் உண்மைகளும்

வழக்குரை காதை.(பகுதி .4)  உடையும் சிலம்பும் வெளிவரும் உண்மைகளும்  

கண்ணகி உரைக்கும் முன் தீர்ப்புகள்

'தேரா மன்னா'..எனத் தொடங்கி ,மன்னனிடம் வாதாடும் கண்ணகி இரண்டுவழக்கின் தீர்ப்புகளை முன்வைக்கிறாள். இன்றைக்கும் நீதிமன்றில் வாதாடுவோர், முன் வழங்கப்பட்ட நீதிமன்றத்  தீர்ப்புகளைத் தன் வழக்கிற்கு வலு சேர்க்கச் சொல்லும் நடைமுறை அன்றைக்கும் இருந்தது வியப்புக்குரியது.                   

தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவின் துயர்போக்கத் தன் தசையை அரிந்து கொடுத்தான்  சிபிச் சக்கரவர்த்தி. 

கன்றையிழந்த தாய்ப்பசுவின் துயர்போக்கத் தன் அருமைப்புதல்வனைத் தேர்க்காலிலிட்டுக் கொன்றான் மனுநீதிச்சோழன்.

                  சிபிச் சோழன் குறித்து சங்க இலக்கியத்தில் குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மனுநீதிச் சோழன் பற்றிய குறிப்பைச், சங்க இலக்கியமான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'பழமொழி நானூறு' காட்டுகிறது.

"சால மறைத் தோம்பிச் சான்றவர் கை கரப்பக் 

 காலை கழிந்ததன் பின்றையும் மேலைக் 

 கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் 

 முறைமைக்கு மூப்பிளமை இல்"

பெரியபுராணம் காட்டும் மனுநீதிச் சோழன் 

           திருவாதவூரில் மனுநீதிச் சோழன் தவமிருந்து பெற்ற பிள்ளை 'வீதிவிடங்கன்'. அவன் சிவாலயம் செல்லத் தேரேறிச் சென்றபோது, ஒரு பசுங்கன்று தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்தது. கன்று இறந்தது கண்டு மனம் பொறாத தாய்ப்பசு, அரண்மனை வாயிலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தது. என்ன நடந்தது என வினவிய மன்னனுக்கு அமைச்சர் சொன்ன பதிலில், இன்று குற்றவாளியைக் காப்பாற்ற, வல்லாண்மை மிக்க ஒரு சாதுர்யமான வழக்குரைஞரின் வாதத் திறன் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

" வளவநின் புதல்வன் ஆங்கோர் மணிநெடுந் தேர்மேல் ஏறி 

 அளவில்தேர்த் தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால் 

 இளையஆன் கன்று தேர்க்கால் இடைபுகுந் திறந்த தாகத் 

 தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்றான்" 

              இன்றைக்கு சைரன் பொருத்தப்பட்ட வண்டிபோல் அன்று 'மணி'ஒலிக்கும் 'நெடுந்தேர்,

              இன்று ராணுவ வாகனங்கள் மட்டுமே செல்லும் வழிபோல் (prohibitted area) அன்று 'அரசு உலாந்தெரு'    

             இன்றும் வாகன சட்டப்படி, பின்னுள்ள சக்கரங்களில்  விபத்து ஏற்பட்டு இறந்தால்..அது ஓட்டுநரின் குற்றமல்ல. அன்று, கன்று 'தேர்க்கால் இடைபுகுந்து இறந்தது'.

     அதனால் இளவரசன் மேல் குற்றமில்லை.அமைச்சரின் விளக்கத்தால் அமைதியடையாத அரசன், கலாவல்லபர் என்ற மந்திரியை அழைத்து, மகனைத் தேரேற்றிக் கொன்று வருக என ஆணையிடுகிறான். மந்திரியோ கன்று இறந்த இடத்தில் தான் இறக்க, மனம் பொறாத மனுநீதிச்சோழன், தானே தேரேறிச் சென்று தன் ஆருயிர் புதல்வனைக் கொல்கிறான்.

(இராமலிங்க அடிகளார்  தன் 'மனுமுறை கண்ட வாசகம்'என்ற நூலிலும் மனுநீதிச் சோழன் வரலாற்றை விரிவாக எழுதியுள்ளார்.)

உடை..உடை...உடையும் சிலம்பு 

        இதோ நீதி மன்றத்தில் சினத்தோடு நிற்கிறாள் கண்ணகி. "கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று "என்கிறான் மன்னன்

               ."என் கால் சிலம்பு மணி உடை அரியே" என்கிறாள் கண்ணகி. "யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே" என்கிறான் மன்னன். சிலம்பு உடையப் போகிறது என்பதை நமக்கு முன்பே உடை..உடை...உடை என வார்த்தைகளால் காட்டுகிறார் இளங்கோ.

        இதோ கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பு முன்வைக்கப்படுகிறது. அந்தச் சிலம்பைக் கண்டதும் கண்ணகியின் சீற்றம் அதிகமாகிறது. எடுக்கிறாள்; உடைக்கிறாள்; கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கப்பரல்கள், வாய்மை தவறிய மன்னவனின் முகத்தில் தெறிக்கிறது.

நீதிமன்றம் நாளை கூடும்..... 

       

 

 

 

 

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வழக்குரை காதை .( பகுதி..3)..வழக்கு தொடர்கிறது...

நீதிமன்றத்தில் நுழைகிறோம்.. 

      சீற்றத்துடன் தலைவிரிகோலமாய், கண்ணீருடன், ஒற்றைச் சிலம்புடன் கோவேந்தன் மாளிகைக்குச் செல்லும் கண்ணகியைத் தொடர்ந்து, நாமும் அரசவைக்குப் போவோம்.

அரண்மனை வாயிலில் வயிற்காவலன் தடுக்கிறான். அரசப் புகழுரைகளை மட்டுமே கேட்டிருந்த அவன்,

  "அறிவறை  போகிய பொறியறு நெஞ்சத்து 

    இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!"    என்ற வசையுரையில் அதிர்ந்துவிடுகிறான்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

வழக்குரை காதை .( பகுதி..2)..வழக்கு தொடர்கிறது...

ஏன் பாண்டியன் அப்படிச் செய்தான்..?

    பொற்கொல்லன் சொல்லையே உறுதியாக ஏற்று  பாண்டியன் கோவலனைத் தண்டித்தது ஏன்.? "வினை விளை காலம்"..அதாவது விதி என்கிறார் இளங்கோ. நுட்பமாகப் பார்த்தால், இளங்கோ என்ற சமணத்துறவிக்கும், ஆளுமைமிக்க கவிஞருக்கும் இடையே உள் நடக்கும் மோதல், காப்பியம் முழுமைக்கும்  எதிரொலிக்கிறது. எங்கெல்லாம் கதைப் போக்கில் திருப்பம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம்,சமணத்தின் அடிநாதமான 'ஊழ்' வெளிப்பட்டுக் கதையை  இயக்குகிறது.அதையும் தாண்டி கவிஞனின் ஆளுமை, சமணக் கோட்பாடுகளை மீறி பெண்மையை உயர்த்துகிறது; புரட்சி செய்யவைக்கிறது.

சிலம்புச் சோலை ..வழக்குரை காதை -ஒரு மீள்பார்வை (பகுதி 1)

  சிலம்புச் சோலை

..வழக்குரை காதை..... உடைத்து வெளிவரும் உண்மைகள் ... (பகுதி..1)

முன்னுரை 

சங்க காலத்தில் தனிப் பாடல்களில் தவமிருந்த அன்னைத் தமிழை, காவிய மாளிகையில் தனிப்பெரும் பேரரசியாக அமரவைத்த பெருமை இளங்கோவடிகளையே சாரும்!.அன்றைய தமிழ்ச் சமுதாய அரசியலை, கலையுணர்வோடு இயைந்த வாழ்வை, அறவாழ்வின் நாட்டத்தை நாம் அறியத்தரும் காப்பியம் சிலப்பதிகாரம். ஆங்கில அறிஞர் டிக்கென்ஸ்,THE TALE OF TWO CITIES' என்று ஒரு நூல் எழுதியிருப்பார்.ஆனால் ,அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  மூன்று நகரங்களின் கதையை ( முப்பது காதைகள் வழியே)  தந்தவர் நம் இளங்கோ. முப்பது காதைகளில் காவியத்தின் இதயமாக இருப்பது 'வழக்குரை காதை'ஆகும். இருபதாவது காதையான ' வழக்குரை காதை'பற்றி இங்கு காண்போம்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

என்ன செய்ய வேண்டும் புதிய அரசு?!

என்ன செய்ய வேண்டும் புதிய அரசு?!

         தேர்தல் களம் அனல் பறக்கிறது! தனிமனிதச் சாடல்களும்,தனக்கு இணங்காத அணியைச் சீர்குலைக்கும் ராஜ தந்திரங்களும்?!! எதேச்சாதிகாரங்களும் ,கட்சிகளுக்குள்ளே நடக்க இருக்கும் உள்குத்து அநாகரீகங்களும் இன்னும் பரபரப்பான தலைப்புச் செய்திகளாகி ஊடங்களுக்குத் தீனி போடும்!...போகப்போக அரசியல் வானில் வறண்ட வானிலையே காணப்படும்.!

ஆட்சி அமைக்கப் போவது யார்?..எந்தக்கூட்டணி..!? இந்தக் கேள்விக்கு மே 16க்குப் பிறகே விடை தெரியும்.

வரப்போகிற ஆட்சி என்ன செய்ய வேண்டும்..? அது ஆண்டுகொண்டிருக்கிற, ஏற்கனவே ஆண்ட, அல்லது புதிய கூட்டணிகள்...எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும்..! இனியாவது  தமிழகம் உருப்பட என்ன செய்ய வேண்டும்..?..அனைவரும் இந்த இலக்கை நோக்கிச் சிந்திப்போம்!

புதன், 30 மார்ச், 2016

அலையும் குரல்களில் அதிரும் உணர்வுகள் { நூல் விமர்சனம் }

அலையும் குரல்கள்-நூல் மதிப்புரை

ஒவ்வொரு காலத்திலும் ஏதேனும் ஒரு பிரச்சனை மையம் கொண்டு, தமிழகத்தைப் பரபரப்பாக்கும். ஹிந்தி எதிர்ப்பும்,ராஜீவ்காந்தி படுகொலையும்,ஈழ இனப் படுகொலையும் தமிழகத்தில் அவ்வப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.இன்று மது எதிர்ப்பு மையம் கொண்டு அரசியலிலும்,சமூகவியலிலும் மாற்றங்களுக்கான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மிகையல்ல!.அய்யா சசிபெருமாளின் இறப்பு,நந்தினி போன்ற மாணவர்களின் தொடர் போராட்டங்கள்,அரசியல் வாக்குறுதிகள் போன்றன மது ஒழிப்புக்கான போரை வேகப்படுத்தியிருக்கின்றன!.அந்த யுத்த களத்திற்கான கூர்வாளாக 'அலையும் குரல்கள்'கவனம் பெறுகிறது!

செவ்வாய், 22 மார்ச், 2016

கதை.2.எது கல்வி?

எது கல்வி ?

தேர்வுக் காலம் இது. மாணவக் கண்மணிகளுக்குச் சோதனையான காலம். வினாக்களின் வெப்பம் தாங்கமுடியாமல், கருகிவிட்ட மலர்களின் சோகக் கதைகள் சொல்லிமாளாதவை!

எது கல்வி? எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க வேண்டும்?..இதோ கதை..2 

 குரு தம்மிடம் படித்த மூன்று மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி விடையளித்தார். நிறைவாக ஒரு தேர்வு வைத்தார். மூன்று மாணவர்களுக்கும் தனித்தனியாக ஒரே அளவுள்ள மூன்று பாறைகள் காட்டப்பட்டன.

திங்கள், 14 மார்ச், 2016

கதை சொல்லப்போறேன்...

வலையுலக உறவுகளுக்கு வணக்கம்..எண்ணப்பறவை..நீண்ண்ண்ட...நாட்களாக வலைக்காட்டில் பறக்கவில்லை....இனி அவ்வப்போது...தன சிறகை மெல்ல விரித்துப் பறக்கும்.

(...இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது...என்னவென்றால்...இனி இந்தப் பறவை வாரம் ஒரு கதை சொல்லப் போகுது....டமடமடமடம.....)

Related Posts Plugin for WordPress, Blogger...