செவ்வாய், 18 நவம்பர், 2014




கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் 'கம்பன் தமிழும் கணினித்தமிழும்'

ஒரு வாசகனின் பார்வையில்..

   "கிளிக்குப் பச்சைவண்ணம் தீட்டவேண்டுமா?"எனக் கேட்பார் அறிஞர் அண்ணா.கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 'மதிப்புரை'தேவையா? அவரின் பேச்சுக்கும்,எழுத்துக்கும் மயங்காதவர்கள் உண்டோ.?
பல்வேறு மாத,நாள் இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளிவந்து,தமிழறிஞர்களின் மனதில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய பதினாறு கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் முத்துநிலவன். கதை,கட்டுரை படிப்பதைப் போல,கட்டுரைகளைப் படிக்க முடியுமா.? அது படிப்போரின் உள்ளத்தைக் கவருமா?..முடியும் என நிரூபித்திருக்கிறார் முத்துநிலவன்.!அவரின் பரந்த வாசிப்பும்,ஆழமான மரபுப் பயிற்சியும்,புதியன கற்கும் ஆவலும்,அவரின் எழுத்துக்கு வலுவும் சுவையும் சேர்த்திருக்கின்றன.
       ஒரு கவிஞராக,ஓர் ஆய்வாளராக,ஒரு மேடைக்கலைஞராக_இப்படிப் பன்முகத் தன்மையில் இயங்குவதால்,இவரின் பார்வை விசாலப்பட்டிருக்கிறது.

கட்டுரை எழுதுவதென்பது..

(பேராசிரியர் தி.இராசகோபாலன் அவர்கள் எழுதிய 'பற்றி எரியும் பனிக்கட்டிகள்'நூலுக்கு, சின்ன குத்தூசி அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்ட செய்தியை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.)   
   சென்னையில் 45ஆண்டுகளுக்கு முன்பு,கதை எழுதுவது,கவிதை படைப்பது,கட்டுரை எழுதுவது-இவற்றில் எது கடினம் என்ற விவாதம் நடைபெற்றது. அதில் தீபம் நா.பா, கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன் போன்ற அன்றைய இலக்கியவாதிகள் கலந்துகொண்டனர்.விவாதத்தின் முடிவில்,கதை,கவிதை எழுதுவதைவிட கட்டுரை எழுதுவதுதான் கடினம் என்ற முடிவுக்கு வந்தனர்."எளிமையாக இருப்பதுடன்,படிப்போர் மனத்தை நெகிழவைத்து,அவர்களை வழிநடத்தும் வகையிலும் இருக்கவேண்டும்...இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதவேண்டுமானால்,அந்த எழுத்தாளர் பல்வேறு இலக்கியங்களில் ஆழங்கால்பட்டவராக,படைப்பாற்றல் மிக்கவராக இருக்கவேண்டும்" என்றெல்லாம் அந்தப் பொதுக் கருத்துக்கு விளக்கமும் அளித்தார்கள்.
நூலாசிரியர் முத்துநிலவன்,தான் ஒரு படைப்பாளராகவும்,புதிய படைப்பாளர்களை ஊக்குவித்து உருவாக்கக்கூடியவராகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்.

அணிந்துரைகள் மற்றும்,புதுக்கவிதை..கட்டுரைகள் பற்றி..

இந்நூலில் நான்கு அறிஞர் பெருமக்கள் அணிந்துரை அளித்துள்ளனர்.பதினாறு கட்டுரைகளில் நான்கு கட்டுரைகள் புதுக்கவிதை குறித்துப் பேசுகின்றன.அணிந்துரைகள் குறித்தும்,மூன்று கட்டுரைகள் குறித்தும்(இன்றைய தமிழில் பெண்கவிகள், புதுக்கவிதை-வரவும் செலவும், மரபுக்கவிதை எனும் மகாநதி வற்றிவிட்டதா?) என் மனதில் எழுந்த எண்ண அலைகளை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அழகு சேர்க்கும் அணிந்துரைகள் 

ச.தமிழ்ச்செல்வன் தன் முகவுரையில் "...தமிழ் இலக்கிய உலகில்...சில ஆழமான விவாதங்களுக்கு ஊடே செல்வதால்,50ஆண்டுகால இலக்கியவரலாற்றின் ஒரு குறுக்குவெட்டாக இந்நூல் அமைகிறது"என்றுகூறி,இத்தொகுப்பிற்கு வளம் சேர்த்துள்ளார்.மேலும்,'தன்னுடைய கருத்தைத் துறுத்தலாக வைக்காமல்,தன் பார்வையை இடையிடையே வைத்துச்செல்வது சிறப்பு'என்றும், 'புதுக்கவிதை வரவும் செலவும் என்ற கட்டுரை,வல்லிக்கண்ணன் இல்லையே என்ற குறையைத் தீர்க்கிறது'என்றும்,'நம் முற்போக்குக் கவிஞர்கள் குறித்து நூலாசிரியர் கொள்ளும் நம்பிக்கையும் பெருமிதமும் எனக்கு இல்லை'என்றும் கூறி, 'காமம் செப்பாது கண்டது மொழிந்து' அவர் அறத்தொடு ஆய்வுசெய்துள்ளார். .
  முனைவர் மதிவாணன் அவர்கள் தன் மதிப்புரையில், முத்துநிலவன் அவர்களின் ஆளுமை பற்றி மிகத்துல்லியமாக மதிப்பீடு செய்துள்ளார்.ஆசிரியத் தொண்டு,சமூக அக்கறையோடு அழகியல் குன்றாக் கவிதையாக்கம்...எனத் தொடங்கி,கணினியின் புதிய தொடர்புகளை உள்வாங்கி,உலகளாவிய நிலையில் உலவுதல்...என அவர் பட்டியல் போடும்போது,முத்துநிலவன் அவர்களின் பன்முக ஆற்றல் நம் கண்முன்னே விரிகின்றது.
  கல்லூரிக்காலத்திலேயே நூலாசிரியரின் போர்க்குணமும்,தென்றல் போன்று பழகும் திறமும் கண்டு,'பாஸ்கரனை நிலவனாக்கியவர்'செந்தலை ந.கவுதமன் அவர்கள்."நூலாசிரியர் எழுப்பியுள்ள விவாதங்கள்,இன்னும் பல்வேறு ஆய்வுகளுக்கான அடர்த்தி மிக்கவை"என்று அணிந்துரையில் அவர் சொல்லியிருக்கும் பாங்கு நேர்த்தியானது. அவர் வரிகளிலேயே சொல்வதானால்,"....தமிழிலக்கியப் பெரும்பரப்பைத் தூக்கித் தூசகற்றிக் காட்ட முயல்கிறது இந்நூல். தேற்றிய விளைச்சலில் தெறித்து விழுந்தவை,மடியைக் கனமாக்குகின்றன. மடியில் விழுந்தவை,மறுவிளைச்சலை உருவாக்கும் வீரியமுள்ளவை..!"
         எதையும் மாறுபட்ட கோணத்தில் ஆய்வுசெய்யும்  மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்,தனது முன்னுரையில் "நூலாசிரியர் தமிழ் மரபு,மார்க்சிய அறிவு இரண்டையும் இரு கண்ணாகக் கொண்டு ஆய்வைச் செய்துள்ளார்"என்றும்,"இந்த ஆய்வுகள்,இலக்கியத்தின் அடர்த்தியை மட்டுமல்ல,அதன் ஆன்மாவையும் கண்டுணர்ந்து சொல்பவை"என்றும் கூறியிருப்பது நுட்பமானது!

ஆழிப்பேரலையாய் பெண்கவிகள்....

 அடக்கப்பட்ட,முடக்கப்பட்ட,தடுக்கப்பட்ட நீர்,தடைகளை உடைத்துக்கொண்டு ஆவேசமாக பொங்கி எழுவது இயற்கையே! யுகம்யுகமாக அடிமையாயிருந்த பெண்ணினம்,தங்கள் ஊமை மௌனத்தை உடைத்துக்கொண்டு,ஆழிப்பேரலையாய்,அணையுடைத்த வெள்ளமாய்,பேசத் தொடங்கியுள்ளனர்.
பெண் உரிமைக்காக பாரதி,பாரதிதாசன்..போன்ற பெரும்கவிஞர்கள் குரல்கொடுத்தனர். இருந்தாலும்,தனக்கான உரிமைகளை ,தன் அவஸ்தைகளை ஒரு பெண் சொல்லுகின்ற அளவிற்கு ஆணால் ஒரு போதும் சொல்லமுடியாது என்பதை,பெண்கவிஞர்கள் தன் கவிதைகள் மூலம் நிரூபித்துவருகின்றனர்.
'தாசனுக்குப் பெண்பால்..' என்ற கவிதையில் வைகைச்செல்வியின் கோபம் கொப்பளிக்கிறது.
  "அம்மாவின் எதிரில்கூட
   ஆடைமாற்றிக்கொள்ளக்
   கூசியிருக்கிறேன்....பேற்றின் வலியோடு
   அலறும் குரலில் இணைந்தே ஒலிக்கிறது
   என் நிர்வாணத்திற்கான அழுகையும்"...அ.வெண்ணிலாவின் கவிதை,
பெண்ணின் வலியை, ஆணால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது என்கிற உணர்வை உண்மையாக்குகிறது!.
    'சந்திரனில் வீடு!
    சாதனை நாளில்கூட 
    பாட்டாளி மக்களுக்குக் 
    கொட்டாங்குச்சியில் காப்பி'...மன்னைரத்திகாவின் வரிகள்,பாட்டன் பாரதியின் "சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் 
           சந்தித் தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்"...என்ற வரிகளை நினைவுபடுத்துகிறது. இன்னும் பலபெண்கவிஞர்களின் கோபம் அவர்களின் கவிதைமூலம் வெளிப்பட்டு,அவர்களுக்கான நியாயத்தை நிலைநிறுத்துகிறது.
நூலாசிரியரின் 'பெண்கவிஞர்களின்' பட்டியல்,அவரின் வாசிப்பு அனுபவத்தைக் காட்டுகிறது.
மரபுக்கவிதைப் பக்கமும் பெண்கள் வரவேண்டுமெனவும், சொற்புனை நலத்திலும்,கற்பனை வளத்திலும்,இன்னும் முன்னேறவேண்டும் என்றும்,அத்தனையையும் பெண்சக்தி செய்துமுடிக்கும் என்றும் நம்பிக்கையோடு கட்டுரையை முடித்திருப்பது நேர்த்தியாக உள்ளது!   

வரவு செலவு
  மாறிவரும் சமூகமாற்றத்திற்கேற்ப,இலக்கியமும் மாறுவது இயற்கையே.! புதுக்கவிதை தோன்றிய காலத்தில்,அதன் போக்கும்,நோக்கும் ஆரோக்கியமானதாக இல்லை.
   பண்டிதர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு,..புதுக்கவிதையை வேறுபாதைக்கு அழைத்துச் சென்றார்கள்.”....என்றும்,

    விரக்தி,தத்துவப்பிதற்றல்,சிலரது மேதவித்தனங்கள்...போன்றவற்றால் புதுக்கவிதைக் குழந்தை ஆரம்பத்தில் சவலைக்குழந்தையாக இருந்தது என்றும்,புதுக்கவிதையின் பலவீனங்களை நூலாசிரியர் பட்டியல் போடுகின்ற விதம் அழகானது. "இலக்கண மரபைக் காப்பதற்காக, கவிஞர்கள் சொற்களைப் பிடித்து இழுக்க வேண்டியுள்ளது. கம்பன்,வள்ளுவன்,பாரதி போன்ற பெருங்கவிஞர்களுக்கும் இந்த இடைஞ்சல் வந்துவிடுகிறது"...என்ற விமரிசகர் பாலாவின் கூற்றை இங்குக் குறிப்பிட்டிருப்பது பொருத்தமாக உள்ளது. 
அப்துல் ரகுமான்,மேத்தா,வைரமுத்து போன்ற புகழ்பெற்ற புதுக்கவிஞர்களின் தத்துவ பலவீனங்களையும், நடுமுள் தடுமாறாமல் தன் ஆய்வுத்தராசில் ஏற்றி எடைபோடும்விதம் போற்றத்தக்கது.!
    மூவாயிரம் ஆண்டுக்காலம் மரபு தராத வீரியத்தையும்,தாக்கத்தையும்,சமூக மாற்றத்திற்கான மோதல்களையும், 30ஆண்டுக்காலப் புதுக்கவிதைகள் தந்துவிட்டன என்ற நூலாசிரியரின் முடிபு ஏற்கத்தக்கது.

 வற்றக்கூடாத மரபுநதி..

  மூவாயிரம் ஆண்டுக்காலம் வற்றாத ஜீவநதி-தமிழ் இலக்கியத்தின் தனிச் சிறப்பு என்பதையும் நூலாசிரியர் மறுக்கவில்லை! மரபுச் செழுமையோடு,மரபின் நல்ல அம்சங்களையும் ஏற்றுக்கொண்டு,புதுக்கவிஞர்கள் எழுதக்கூடாதா..?என்ற ஆசிரியரின் கவலை நியாயமானதே!
  புதுக் கவிதை எழுதமாட்டேன் என்ற சில மரபுப் பித்தர்களின் பிடிவாதமும், மரபின் செழுமையை உணராமல் புதுக்கவிதை படைக்கவருவோரின் அலட்சியப் போக்கும் அவர்களுக்கு மட்டுமல்ல;தமிழுக்கும் மிகப்பெரிய இழப்பாகும் என்ற நூலாசிரியரின் உளக்கருத்து,நூல் முழுதும் ஊடுருவியிருப்பதை உணரமுடிகிறது!.

  இது ஒரு முன்னோட்டமே.....

 ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கும்போதே,அந்தப் படத்திற்கான முன்னோட்டம் வெளியாகி ,எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது இயல்பு.அதுபோல கவிஞர் முத்துநிலவன் அவர்கள்,அடுத்த ஆண்டு,'கவிதையின் கதை'என்ற தமிழ்க் கவிதையின் வரலாற்றை நிறைவு செய்து வெளியிட உள்ளார். அதற்கான வெள்ளோட்டமே இந்த நூல்.!
இலக்கிய உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் 'கவிதையின் கதை' நூலும் வெளிவந்து,தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு விவாதங்களை உண்டாக்கட்டும்!
   மெல்லத் தமிழினி வளரட்டும்..!    
வெல்லத் தமிழுக்கு வளம்பல சேர்க்கட்டும்..!

29 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்.

    தமிழின் பல்வேறு ஆளுமைகளை நான் அறிவேன்.

    மரபில் காலூன்றியவர்கள். புதுமைகளை ஏற்காதவர்கள்.

    புதுமை அறிந்தவர்கள். மரபை ஏற்காதவர்கள்.

    கட்டுரை, கவிதை , சிறுகதை, நாடகம், பாட்டு என ஏதேனும் ஒரு வடிவத்தைப் பற்றி அதில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள்.
    அல்லது இவை பற்றிய பரந்த பார்வையோடு இதனை விமர்சிப்பவர்கள்.
    பெரும்பாலும் இவை பற்றிய பிரக்ஞை யற்று இவற்றை நுகர்தல் மட்டுமே கொண்டவர்கள்.
    இவை எல்லாவற்றையும் படைக்கவும் படிக்கவும் செய்யும் ஆசிரிய பலத்தோடு இந்தக் கட்டுரைகள் வாசகன் முன் நிற்கின்றன.
    ஒருவரின் கட்டுரைகளை வாசிக்கும் போது இரு விஷயங்களை நான் அவதானிக்கக் கற்றிருக்கிறேன். அது ஒரு பக்கக் கட்டுரையானாலும் சரி .
    ஆய்வுக் கட்டுரையாய் இருந்தாலும் சரி.

    ஒன்று அவரது எழுத்தில் வெளிப்படும் பரந்து பட்ட வாசிப்பு
    இரண்டு அந்த வாசிப்பினை மூலதனமாகக் கொண்ட எழுத்தாளனின் புதிய உற்பத்தி. அவனது கண்டுபிடிப்பு. அதனால் சமூகத்திற்கு அவன் சொல்ல வரும் செய்தி.
    நீங்கள் இந்த அளவு கோலை வைத்து அளந்தீர்கள் என்றால் பெரும்பாலான எழுத்துகள் ஏன் ஆய்வுக்கட்டுரைகளே கூட பல நேரங்களில் பலரது எழுத்துக்களையும் எண்ணங்களையும் பிரதி பலிப்பதாய், கட்டுரையாசிரியர் யாரேனும் ஒருவரது கருத்தை வழிமொழிந்து போவதாய், அல்லது வாசிப்பனிடமே தீர்வைத் துப்பறிந்து கொள்ளச் செய்வதாய் அமைந்திருக்கக் காணலாம். அடுத்தவரிடம் கடன்பெற்றுப் பணக்காரன் ஆகி விட்டதாய்க் காட்டிக்கொண்டிருக்கும் பலரின் எழுத்துகள்.
    செய்திகளைத் தொகுத்துத் தரும் தகவல் களஞ்சியமான பல கட்டுரைகள் தீர்வினை முன்வைப்பதில்லை.
    முடிவினை முன்வைத்துச் செல்லும் சில அதற்கான போதுமான தரவுகளைக் காட்டுவதில்லை.
    இந்நூல் போல் விதிவிலக்குகள் வெகுசிலவே!
    முத்துநிலவன் அய்யாவின் 16 கட்டுரைகளில் ஒன்றில் கூட எவரும் இந்தக் குறையைக் காண முடியாது.
    அடுத்து போகிற போக்கில் முகத்திலறைந்தாற் போன்ற நிதர்சனத்தைக் காட்டிச் செல்லும் எழுத்துகள்,
    “அட ஆமா ! உண்மைதானே ! இவ்வளவு நாளா நாம கவனிக்கலையே!“
    என்று நினைக்க வைத்துவிடும் வல்லமை அவற்றிற்குண்டு!!
    பன்முகம் கொண்ட ஆளுமைகளில் பலரும் ஏதாவது ஒரு துறையில் தான் முதிர்ச்சி பெற்றிருப்பா்.
    இவர் போலக் காணல் அரிது.
    ஒரு வரியில் சொல் என்றால் இந்நூல், “ கணினி கற்ற கம்பனின் தமிழ்“
    அவரது “ கவிதையின் கதை “ ஏறக்குறைய அவரது ஐம்பது ஆண்டுகால உழைப்பில் இரண்டாயிரம் ஆண்டு கால தமிழ்மரபைக் கொண்டு அடக்குவதாய் இருக்கும் என்பதால் கற்கக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவனாயிருக்கிறேன்.
    பகிர்வுக்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜூ! உங்கள் அன்பின் ஆழத்தையும் என்மீது நீங்கள் கொண்டிருக்கும் பெருமதிப்பையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்று கவலை வருகிறது. நிச்சயம் நீங்கள் சொன்னவற்றிற்கு என்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள முயற்சி செய்துகொண்டே இருப்பேன். நண்பர்களின் பலம் நம் பலம் என்று உண்மையில் நம்பிச் செயல்படுபவன் நான். சரிதானே? அந்த வகையில் நீங்கள் உட்பட எனக்குக் கிடைத்த நண்பர்கள் தான் என்னை இயக்குகிறீர்கள். மிகுந்த நன்றி நண்பா.

      நீக்கு
    2. ஐயா.!வணக்கம்!..."கணினி கற்ற கம்பனின் தமிழ்"...அருமையான வரி..!இது இது இதுதான்யா விஜூ அய்யா.!
      இந்தக் கட்டுரை எனக்கு நிறைவில்லை.இன்னும் செறிவாக எழுதியிருக்கணும் நான் என்ற உணர்வு எனக்குண்டு.
      இலக்கியம் ஒரு சிறகாகவும்,மார்க்சியம் மற்றொரு சிறகாகவும் கொண்டு,இலக்கு நோக்கிப் பறக்கிற 'ராஜாளிப் பறவை'..நிலவன் அய்யா அவர்கள்.!.நெஞ்சில் பட்டதை அப்படியே நேர்படச் சொல்லுதல் அவரின் குணம்.!
      எழுத்திலும்,பேச்சிலும்,(பாராட்டிற்காகவோ,கைத்தட்டலுக்காகவோ) சமரசம்செய்துகொள்ளாதவர் அவர். 'வேண்டுதல்,வேண்டாமையோடு' அவர் எழுதிவருகிற "கவிதையின் கதை"..காலத்தை வெல்லும்!..அந்த விழாவையும்வெற்றி விழாவாக்குவோம்..!

      நீக்கு
  2. வணக்கம் சகோதரர்
    நம் நேசத்திற்குரிய கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் படைப்புகள் அவரின் ஆழ்ந்த வாசிப்புக்கும், இலக்கியங்களின் மீதான தன் காதலையும் பறைசாற்றும். புதுக்கவிதைகள் படைப்பது போல் மரபுக்கவிதை படைக்கவில்லையே என்று பொங்கும் அதே சமயத்தில் மரபுக்கவிதைகள் சாதிக்காததைப் புதுக்கவிதை சாதித்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் போது நடுவுநிலை காக்கிறார். சமகால பெண்கவிஞர்கள் பட்டியல் முழுவதும் ஐயாவிடம் இருக்கும். பட்டியல் மட்டும் அல்ல அவர்களின் படைப்புகளையும் பின் தொடர்ந்தே பயணிப்பார் என்பதை நேரில் கண்டவர்கள் நாம். திறமைகள் எங்கிருப்பினும் ஈகோ பார்க்காமல் வரவேற்பவர் ஐயா அவர்கள். ஒரு இளைஞனைப் பார்த்து ஐயா பேசினால் அது உங்களுக்குள் இருக்கும் கவிஞனை எழுப்பி விடுங்கள் எனும் அன்பு கட்டளையாகத் தான் அது இருக்கும். நான் இன்னும் இந்த புத்தகத்தைப் படிக்கவில்லை என்பது தான் பெரும் குறையாக உள்ளது சகோதரரே. விரைவில் புதுகை வர வேண்டும். சிறப்பான பதிவுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க பாண்டியன்... நீங்கள் புதுகை வந்து பல நாளாயிற்று என்பதைப் புதுகை நண்பர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். விரைந்து வருக! வரும்போதே, வலையில் கவிதை, நல்ல சமூகச் சிந்தனை விதைகளை விதைத்துக்கொண்டே வருக! அதுதான் நல்ல வருகை!

      நீக்கு
    2. வணக்கம்! வாங்க..புதுக்கோட்டை உங்களை வரவேற்கிறது
      ......"திறமைகள் எங்கிருப்பினும் ஈகோ பார்க்காமல் வரவேற்பவர் ஐயா அவர்கள். ஒரு இளைஞனைப் பார்த்து ஐயா பேசினால் அது உங்களுக்குள் இருக்கும் கவிஞனை எழுப்பி விடுங்கள் எனும் அன்பு கட்டளையாகத் தான் அது இருக்கும்"......உண்மையான வரிகள்.!..பேச்சிலேயே (அதுவும் ஒழுங்காப் பேசத்தெரியாது) சுகம்கண்டிருந்த என்னை, எழுத்தின் பக்கம் திருப்பியவர் அவர்தானே..!

      நீக்கு
  3. நிறைவான விமர்சனம். கவிஞர் முத்துநிலவன் அவர்களின் நூலை ந்ன்கு ஆழ படித்து இருக்கிறீர்கள் என்பது உங்களின் விமர்சனத்தில் தெரிகிறது. நூலினை நானும் வாங்கி வைத்து இருக்கிறேன். தங்கள் விமர்சனம் அந்த நூலினை சீக்கிரம் எடுத்து படிக்கச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லிடுச்சா...? அப்ப இது நல்ல விமர்சனம்தான்.
      உங்கள் விமர்சனத்திற்காகக் காததிருக்கிறேன் அய்யா. நன்றி

      நீக்கு
  4. காத்திருக்கிறேன் நானும் ...
    ஆவலோடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பு! காத்திருக்கிறோம்னு நாங்க சொல்றது உங்ககிட்டஇருக்கிற புத்தகப் படிச்சுட்ட நீங்க சொல்லப்போற விமர்சனத்துக்கு.. நீங்க எப்ப சொல்லப்போறீங்க?

      நீக்கு
    2. நாங்களும் காத்திருக்கிறோம் ஆவலோடு..!
      உங்கள் விமர்சனத்திற்காக ..!

      நீக்கு
  5. ஒரு வகுப்பின் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவனின் தேர்வுத்தாளை பார்க்கும் உணர்வு வருகிறது உங்கள் இக்கட்டுரையை பாருக்கும் போது. மேற்கோள்கள், அவற்றுக்கு தனி வண்ணங்கள், பத்தி பிரித்தல்!!!!! உங்கள் மாணவர்களுக்கு பற்றுவித்தத்தை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அப்படி எடுத்துக்காட்டும் மேற்கோள்கள் கருத்துக்கு பொருத்தமாகவும், வலுவூடுவதாகவும் உள்ளன!! தமிழ் தளங்களில் ஒரு பரபரப்புக்கு திரிகிள்ளி பதிவை முடித்திருகிறீர்கள்! அடுத்த பதிவுக்கும், அண்ணாவின் அந்த புத்தகத்திற்கும் ஆவலோடு காத்திருக்கிறேன்::)) நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொல்லு மைதிலி! இதத்தான் நானும் இவருகிட்ட சொல்லிக்கிட்டே இருக்கேன். எழுத மாட்டேங்கிறாரே! (பரவாயில்ல... பேச்சில் ருசிகண்ட பலர் எழுதுவதே இல்ல.. இவர் எழுதத் தொடங்கியதே நல்ல அறிகுறிதான்) நன்றிம்மா

      நீக்கு
    2. நன்றி தங்கையே.!.நான் எழுத்தில் இன்னும் மாணவன்தானே..!

      நீக்கு
  6. வெள்ளோட்டமே இப்படி இருந்தால்.... ஆவலுடன் நான்காவது பதிவர் சந்திப்பில்...!

    // புதியன கற்கும் ஆவலும் //

    // புதிய படைப்பாளர்களை ஊக்குவித்து உருவாக்கக்கூடியவராகவும் //

    அவரின் ஆர்வத்தை நினைத்து பலமுறை வியப்பதுண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலாவது பதிவர் சந்திப்புக்கு முன் நீங்கள் நான்கு முறையாவது வரவேண்டியிருக்கும் வலைச்சித்தரே! (இங்கே புதிய வலைப்பக்கத் துவக்கத்திற்கு 10பேர் நச்சரிக்கிறார்கள். விரைவில் அழைப்பு வரும்...) புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்திற்கு விதைபோட்டவரே நீங்கள் தானே?

      நீக்கு
    2. வலையுலக வேந்தருக்கு வணக்கமும்,நன்றியும்..!
      நீங்கள் கொளுத்திப்போட்ட திரி..தான் எரிந்துகொண்டிருக்கிறது.!

      நீக்கு
  7. முத்து நிலவன் ஐயாவின் நூலிற்கு தங்களின் இந்த விமர்சனம் மிக அருமை.
    ஒரு நூலிற்கு எவ்வாறு விமர்சனம் எழுத வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். அதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. பிற செய்திகளையும் எப்படிச் சுவைபடச் சொல்லலாம் என்பதை உங்கள் எழுததில் கற்றுவருகிறேன் (ஆமா அங்க வந்த நம்ம பிரதமர்ஜியின் பேச்சின் சுருக்கத்தை உங்கள் தளத்தில் போடலயா?)

      நீக்கு
    2. நன்றி அய்யா..!
      நான் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய இருக்கு அய்யா..!

      நீக்கு
  8. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகா.சுந்தர்லாம் எழுதினா நான் காணாமப் போயிருவேன்னு என்மேல் கருணையினால் எழுதமாட்டேங்கிறார் அய்யா. கரைச்சுக் கரைச்சு இப்பத்தான் எழுதிக்கிட்டு வர்ரார். தொடர்ந்து உங்களைப் போன்றவர்களின் ஊக்கம்தான் எழுத வைக்கும் நன்றி அய்யா.

      நீக்கு
  9. வணக்கம்
    சுந்தரர் தந்த சுந்தர அறிமுகம் அருமை...
    இதை நான் அவரது தளத்திலேயே படித்துவிட்டேன்..

    பதிலளிநீக்கு
  10. அய்யா,
    வணக்கம். தங்களின் பின்னூட்டத்திற்கான என்பதிலில் புதிரொன்றைக் கேட்டுள்ளேன்.
    நேரம் வாய்க்கும் போது கண்டு பதிலிடக் கோருகிறேன்.
    விடை தங்கட்குத் தெரிந்ததுதான்!
    நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...