வெள்ளி, 2 அக்டோபர், 2015

பெண்ணே! தடைகளைத் தகர்த்து, விடைகளைக் காண்.



          (வகை-(3) பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப்போட்டி)

                      “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்ட கட்டுரை. 

முதலில்....
 “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
 அறிவில் ஓங்கியிவ் வையம் தழைக்குமாம்”..
.என்று பாடிக் களித்தான் பாரதி. சாதிகளில் ஆகத் தாழ்ந்த சாதியாகச் சமூகம் கருதுவது ‘பெண் சாதி’யைத்தான். ஆதிகாலம் தொட்டு அண்மைக்காலம் வரை பெண்கள சக உயிராகக்கூடக் கருதப்படவில்லை என்பதை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது. பலருக்குப் பெண் என்பவள் ஒரு நுகர்வுப் பொருளே!? பெண்களின் நேற்றைய நிலைப்பாட்டை, இன்றைய இடர்ப்பாட்டை, நாளைய செயல்பாட்டைப் பேச முனைகிறது இந்தக் கட்டுரை.
மாறிய தலைமை              
        தாய்வழிச் சமுதாயத்தில் பெண்  ‘தலைமை’ தாங்கினாள். நிலவுடைமைச் சமுதாயம் தோன்றியபோது தலைமையும்,நிலைமையும் மாறியது. ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் காம வேட்கை, நுகர்ச்சி, ஆணுக்குப் பெருமை அளிப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் பெண் என்பவள் குடும்ப அமைப்புக்குக்  கட்டுப்பட்டு, ஆணைச் சார்ந்து அல்லது ஆணுக்கு அடங்கி நடப்பதே உயர்ந்த பெண்மை என்ற பொதுச் சிந்தனை இருந்தது. பெண்ணுக்கு விதிக்கப்பட்ட கற்பு நிலை, ஆணுக்கு விலக்கப்பட்டு இருந்தது.
எம்மதமும் சமமதமே
        பல்வேறு திசைகளில் பயணிக்கும் எல்லா மதங்களும், பெண்கள் விடயத்தில் “சமமாகவே” இருந்தன.
அவதார புருஷர்கள் எல்லாரும் ஆணாதிக்கத்தின் பிரதிநிதிகளாகவே இருந்துள்ளனர். 
 “காட்டுக்குள் தமயந்தி விரட்டப்பட்டாள்.
  கடைத்தெருவில் சந்திரமதி விற்கப்பட்டாள்.
வீட்டுக்குள் கிடந்த பதிதன்னை தாசி வீட்டுக்கே அழைத்துச் சென்றாள் நளாயினி.
நாட்டுக்குள் நடைபெற்ற சூதாட்டத்தில் பாஞ்சாலி பணயப்பட்டாள்!...என்கிறார் சுந்தரபாரதி என்ற கவிஞர்.
அரிச்சந்திரன் மனைவியை விற்றிருக்கிறான். தர்மத்தில் சிறந்தவன் (பெயரே..தர்மன்) மனைவி பாஞ்சாலியைச் சூதாட்டதில் பணயம் வைத்திருக்கிறான். ‘நடையில் உயர் நாயகன்’ இராமனே சீதையைத் தீயில் இறங்க வைத்துத் தானும் ஒரு சராசரி ஆணேயெனக் காட்டியிருக்கிறான்.
  “சீதையைப் பொருத்தவரை
  இராவணனும் இராமனும் ஒரே ஜாதி!
  கடத்தியவன் சிறையில் வைத்தான்.
  கட்டியவன் சிதையில் வைத்தான்!”........என்ற புதுக்கவிதை அவதார புருஷனின் ஆணாதிக்கத்தைக் கேலிசெய்கிறது. உலகத்தின் மற்ற மதங்களும் பெண்களுக்கான உரிமைக் கதவுகளைச் சாத்தியே வைத்தன. யூத மதத்தின் பத்துக் கட்டளைகள் ஆணுக்கு மட்டுமே சொல்லப்பட்டவை. “ஒரு பெண்ணால் சங்கராச்சாரியாராகவோ, போப்பாண்டவராகவோ, இஸ்லாம் மதகுருவாகவோ ஒருபோதும் ஆகமுடியாது!?” என்ற சுகி.சிவம் அவர்களின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது.(பெண்ணே நீ வாழ்க..நூலில்)
அறிஞர்கள் பார்வை
         பேரறிஞர்களாகக் கருதப்பட்டவர்களும் பெண்மையின் இயல்பைப் புரிந்துகொள்ளவில்லை. சாக்ரடீஸ் “பெண் போகத்திற்குரிய பொதுவுடைமைப் பொருள்” என்றார். ”பெண்ணுக்கு ஆணைப்போல் முப்பத்திரண்டு பல் கிடையாது” என்ற தத்துவத்தைச் சொன்னவர் யார் தெரியுமா?...அரிஸ்டாட்டில் என்கிற மாமேதை(?). மேற்கத்திய மரபு, பெண்மையை ‘weaker sex’ என்றது. வள்ளுவன் முதலில் “பெண்ணின் பெருந்தக்க யாவுள? என்று குரல் கொடுத்தான்.
            தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழும் பெண்ணே, உயர்ந்த கற்பினள். அவள் சொல்லுக்கு மழையும் கட்டுப்படும்” என்று கற்பு விடயத்தில் அவன்காலச் சிந்தனையையே வெளிப்படுத்தினான். பின்னர், பாரதி,
  “கற்பு நிலை என்று சொல்ல வந்தால்-இரு  
  கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று கற்பைப் பொதுவாக்கினான். பாரதிதாசன் பெண்ணுரிமைக்குப் பெருங்குரல் கொடுத்தான். தந்தை பெரியார் களத்தில் இறங்கிக் காரியமாற்றினார்.
இன்றைய நிலை
  தடைகளைத் தகர்த்து...
          அடிமைப்பட்டுக் கிடந்த இனம், இன்று தடைகளைத் தகர்த்து வீறுகொண்டு எழுந்து வருகிறது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை. கல்விச் சிறகுகள் பெண்களை வாழ்வின் உயர்ந்த இடங்களுக்கு உயர்த்தியிருக்கிறது என்பதும் உண்மை. இதுவரை ஆண்களின் பார்வையிலிருந்தே தங்களின் உலகத்தைப் பார்த்துவந்த பெண்கள், தங்களுக்கான தங்களின் உலகத்தைக் கட்டமைக்கத் தயாராகிவிட்டனர். தலையணைக்கு உறை மாட்ட மட்டும் தெரிந்த பெண்கள், இன்று இராணுவத்தில் துப்பாகிகளுக்குத் தோட்டாக்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ‘மனையுறை மகளிர்’ விண்வெளி விந்தைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். கலை,இலக்கியம் என எல்லாத்துறைகளிலும் ‘பேசாப் பொருளை’ பேச முன்வந்துள்ளனர்.
  “கல்லானால் அவன் ரோட்டுக்கு!
  புல்லானால் அவன் மாட்டுக்கு!”..என்ற கவிதைக் குரலும்,                                            
  “கற்பு பற்றியும்
  மழை பெய்யேனப்பெய்வது பற்றியும் கதைக்க
  அவர்கள் எப்போதும்
  எனது உடலையே நோக்குவர்”..(சங்கரி)...என்ற கவிக் குரலும் பெண்களின் சுயமான வலிகளின் வரிகள்.
கருத்துச் சுதந்திரம் ஓரளவுக்குப் பெண்களுக்குக் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
  உழைக்கும் வர்க்கப் பெண்களின் அவலம்
            உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு, இன்னும் விடியவே இல்லை. கல்வி வெளிச்சம் இன்னும் குடிசை மக்களுக்கு முழுதாய் வரவில்லை.
            “பெண்னென்றால் 'pay'யும் இறங்கும்!” என்ற கவிஞர் தங்கம்.மூர்த்தியின் வரிகள் ஆணை விட அதிகம் உழைத்தும் குறைவாகக் கூலி பெறும் பெண்களின் அவலத்தைக் காட்டுகிறது. 
  பலவீனங்கள்
           தொட்டால் சிணுங்கியைவிட உணர்வுமிக்க சில பெண்கள், எதற்கெடுத்தாலும் குமைந்துபோய் தங்களை முடக்கிக் கொள்கிறார்கள். புகழ்ந்தால் புளகாங்கிதம் அடைவதும், பாராட்டுக்காக ஏங்குவதும் பெண்களின் பெரிய பலவீனம். இந்தப் பலவீனத்தை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பெண்களை வீழ்த்துகிறார்கள். அன்பும், கருணையும், கல்வியும், மானமும்தான் அழகு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்..புறஅழகைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதால்,ஆண்களின் புகழ்ச்சிவலையில் மயங்கிவிடுகிறார்கள். இந்த வலைகளிலிருந்து விடுபட்டால், பெண்கள் பிற தடைகளை எளிதாகத் தாண்டலாம்.   .    
  தடையாய்ப் பெண்கள்
          அன்று முதல் இன்றுவரை பெண்ணுரிமைக்காகப் பெரிதும் போராடியவர்கள், போராடிக்கொண்டிருப்பவர்கள் ஆண்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. (சில அராஜக ஆண்களைத் தாண்டி..)அதேபோல், பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாய்ச் சில பெண்களும் இருக்கின்றார்கள் என்பதும் கசப்பான உண்மையே!
  “போவது அம்மன் கோவில்!
  வேண்டுவது ஆண் குழந்தை!”...என்ற கவிதை, பெண் குழந்தைகள் பிறப்பதைப் பெண்களே வெறுக்கிறார்கள் என்ற உண்மையைச் சுட்டுகிறது. சொந்தத் தளைகளிலிருந்தும் பெண்கள் விடுபடவேண்டும்.
   நாளை..தடைகள் உடைபடும்
             தடுக்கப்பட்ட நீர், தடைகளை உடைத்துக்கொண்டு வரும் என்பது இயற்கை நியதி. கல்வி முழுவதும் அவர்களுக்குக் கிடைத்தால், சுயசிந்தனை மிகும். சுயசிந்தனையும், விடுதலை உணர்வும் கொண்ட பெண்களை, இனி எவராலும் அடிமைப்படுத்த முடியாது. இயற்கையாகவே பெண் ஆணைவிட அதிக ஆற்றல் உடையவள். இயற்கையில் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கின்றன. பெண்சக்தி வெல்லும். தடைகளைத் தகர்த்து, விடைகளைப் பெண்சக்தி காணும்.
   நிறைவாக..
             ஆண், பெண் என்கிற இருவேறு ஆளுமைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் சமூகம் சீரடையும். ஆணும்,பெண்ணும் முரண்பட்டு நிற்காமல், சமன்பாட்டு நிலையில் வாழ்தல் அவசியம். அதற்குப் பெண் முன்னேற்றத்திற்குப் பெருந்துணை புரிவோம்.
 “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோம்” 
 -- (1) இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே என்று உறுதிமொழி அளிக்கிறேன். 

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் அளிக்கிறேன். .

(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் எனது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்புகிறேன். 


                                                   -மகா.சுந்தர்

      

8 கருத்துகள்:

  1. ஆஹா அய்யா அருமையான கட்டுரை...சொந்த தளைகளீருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்பது உண்மைதான்..வாழ்த்துகள் வெற்றி பெற...

    பதிலளிநீக்கு
  2. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. புறநானூற்று மகளிரின் வீரத்தையும் கண்ணகியின் சீற்றத்தையும் கைக்கொண்ட பெண்டிர் ,இடைப்படும் தடைகளைத் தகர்த்தெறியும் காலம் வெகுவிரைவில். அருமையான கட்டுரை . போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. ரசிக்கும் படியான கருத்தும் எழுத்தின் நடையும் வெற்றி கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன வாழத்துகள்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே நல்ல விடயங்களை ஆணித்தரமாக கேட்டு துளைத்தெடுத்து விட்டீர்கள் போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துகள்...

    “போவது அம்மன் கோவில்
    வேண்டுவது ஆண் குழந்தை”.

    அருமை அருமை பெண்ணினத்தையும் சாடிய வரிகள் இரசித்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
  6. சிறந்த உரையொன்றின் அச்சிடப்பட்ட வடிவத்தைப் பார்ப்பதுபோல் இருக்கும் சொல்வீச்சு பதிவெங்கும் இருக்கிறது.

    உங்களிடம் இதுபோன்ற கட்டுரைகளை இன்னும் எதிர்பார்த்துக் கிடக்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அய்யா
    நேர்த்தியான கட்டுரை. நல்ல சிந்தனைக்கு நன்றிகள். வெற்றி பெற வாழ்த்துகள்>

    பதிலளிநீக்கு
  8. தொட்டால் சிணுங்கியைவிட உணர்வுமிக்க சில பெண்கள், எதற்கெடுத்தாலும் குமைந்துபோய் தங்களை முடக்கிக் கொள்கிறார்கள். புகழ்ந்தால் புளகாங்கிதம் அடைவதும், பாராட்டுக்காக ஏங்குவதும் பெண்களின் பெரிய பலவீனம். ......அருமை அய்யா

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...